என்ன சோதனை?

முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார்.

ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார்.

இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமம்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார்.

உடனே அவர் எழுந்து தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா? என்று தத்துவஞானி கேட்டார்.

சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் என்றார் முல்லா.

என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் தத்துவ ஞானி கேட்டார்.

நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் என்றார்.

அதன் விளைவு என்ன? என்று தத்துவ ஞானி கேட்டார்

எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.